''சொந்தமா ஒரு படத்தை டைரக்ட் செய்யணும்...!'' - எஸ்.பி.பி.

Author: Nagaraji.B /

''சொந்தமா ஒரு படத்தை டைரக்ட் செய்யணும்...!'' - எஸ்.பி.பி.ஜூன் 06,2009,09:10 IST

"இதுவரை 18,000 திரைப்படப்பாடல்களை பாடி கின்னஸில் இடம்பெறுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்' என்கிற செய்த சமீபத்தில் பல்வேறு நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தது.



காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து சென்னையில் பல பாடல்களுக்கு ரிக்கார்டிங் முடித்து விட்டு, மாலை விமானத்தில் பம்பாய் புறப்பட்டுச் சென்று, அங்கு விடியற்காலை வரை ரிக்கார்டிங். பின்பு உடனே காலை மீண்டும் சென்னைக்கு வந்து ரிக்கார்டிங்கைத் தொடரும் அளவு பிஸியான பாடகயந்திரம் எஸ்.பி.பி.

""ஓய்வேயில்லாமல் இப்படி ஊர் ஊராகப் பறந்து பாடுவது எப்படிச் சாத்தியமாகிறது?'' என்ற கேட்டதற்கு, ""எல்லாம் ரிக்கார்டிங் விஷயத்தில் நாம் கண்டிருக்கும் கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் முன்னேற்றம்தான் காரணம்'' என்று சொன்ன எஸ்.பி.பி., அதைக் கொஞ்சம் விளக்கமாகவும் சொன்னார்.

""இருபது வருஷங்களுக்கு முன்னாடி நான் இந்த ஃபீல்டில் நுழையும்போதெல்லாம் ஒலிப்பதிவில் சிங்கிள் டிராக் சிஸ்டம்தான். அதாவது, பாடகர்கள் மற்றும் இசைக்குழுவில் உள்ள அத்தனை கலைஞர்களும் ஒரே இடத்தில் குழுமியாக வேண்டும். இப்படி நடக்கும் பாடல் பதவில் பாடகர் அல்லது யாராவது ஓர் இசைக்கலைஞர் என எந்தவொரு தனிநபர் தவறு செய்துவிட்டாலும், மீண்டும் ஆரம்பித்திலிருந்தே செய்தாகவேண்டும். எனவே ஒரு பாட்டு முழுமையாக ஓகே ஆகிற வரை, யாரும் அந்த இடத்தை விட்டு அசைய முடியாது. அதன் பிறகு மூன்று டிராக் வசதி வந்தது. இதில் பாடகர்கள் வாய்ஸ் தனி, இசைக் கருவிகள் தனி என்று பதிவு செய்யும் வசதி இருந்ததால் முன்பை விடக் கொஞ்சம் பெட்டராக மாறியது.



அதையுமடுத்து நான்கு டிராக் வந்தபோது, ஆண் குரல், பெண் குரல், பேஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பதிவு செய்யும் வசதி கிடைத்தவுடன்தான் நீங்கள் பாடல்களை ஸ்டீரியோபோனிக் முறையில் கேட்க முடிந்தது. இன்று நிலைமை ரொம்ப முன்னேறி 24 டிராக் வரை போய்விட்டது. எனவே, சின்னச் சின்ன விஷயங்களைக் கூட தனியாகச் சேர்ப்பதோ நீக்குவதோ சாத்தியம். இதனால் என்னைப் போன்ற பிஸியான பாடகர்களுக்கு நேரம் வேஸ்ட் ஆவதில்லை. பாடலின் அனைத்துப் பகுதிகளும் ரெடியாகப் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு நேரம் கிடைக்கும்போது அந்தந்த நகரத்துக்குப் போய் பகுதியைப் பாடி முடித்துவிட்டு வந்து விடுவேன்'' என்றார்.



""நீங்கள் பாடும்போது ஒவ்வொரு ஹீரோவின் குரலுக்குத் தகுந்த மாதிரி குரல் மாற்றிப் பாடுவதாக ரசிகர்கள் பாராட்டிப் பேசுவதுண்டு. இது நீங்கள் மிகுந்த சிரத்தை எடுத்துச் செய்யும் ஒரு விஷயமா?'' என்று கேட்டவுடன், வாய்விட்டுச் சிரித்தார் எஸ்.பி.பி.,

""எனக்கு ஸ்கூல் காலத்திலிருந்தே மிமிக்ரி செய்யும் பழக்கும் உண்டு. இருந்தாலும் சுருளிராஜன், செந்தில் போன்ற காமெடியன்களுக்கு மட்டும்தான் நான் வாய்ஸ் மாத்தி தமாஷா பாடியிருக்கேனே தவிர, இதுவரை தமிழில் ஹீரோக்களுக்குன்னு தனித்தனி குரலில் நான் பாடினதே கிடையாது. ஆனா, எனக்கே நிறைய பாராட்டுக் கடிதங்கள் வரும். "நீங்க அப்படியே மோகன் மாதிரி பாடறீங்க. கமல் மாதிரி பாடறீங்க சார்' அப்படீன்னெல்லாம் சொல்லுவாங்க. நீங்க படத்தில் ஒன்றிப் போய், அந்த ஹீரோவோட வாயசைவைப் பார்க்கும்போது சைக்கலாஜிக்கலா உங்களுக்கு அந்த எஃபெக்ட் கிடைக்குதே தவிர, நான் அந்த மாதிரியெல்லாம் பாடறதே கிடையாது.



ஆனா, ஒரு காலத்தில் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் நாகேஸ்வரராவுக்கும் குரல் மாத்திப் பாடியிருக்கேன். காரணம், அப்போ இவங்க ரெண்டு பேருக்கும் கண்ட சாலா பின்னணி பாடி, ரொம்ப டாப்ல இருந்த சமயம், திடீர்னு இறந்துட்டாரு. பிறகு நான் நுழைஞ்சு சம்பந்தமேயில்லாத ஒரு வாய்ஸில் பாடும்போது, ஜனங்க அதை ஒப்புக்கலை. எனவே அவங்களுக்கேத்த மாதிரி பாட ஆரம்பிச்சேன். அப்போ கூட என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் இவங்களோட ஸ்டைலை மட்டும் தான் இமிடேட் செய்தேனே தவிர, வாய்ஸை மாத்திப் பாடலை.''



""பாட்டுப் பாடும்போதே இயற்கையா சிரிக்கிறது. வித்தியாசமான சேஷ்டைகள் பண்றது உங்களோட ஸ்பெஷாலிடின்னு எல்லோருக்கும் தெரியும். இது நீங்களா செய்யறதா, இல்லை இசையமைப்பாளர்கள் கேட்கறதுக்குத் தகுந்த மாதிரி செய்வீங்களா?''

""அது ஒரு தமாஷான கதை. திரையுலகில் நுழைஞ்சவுடனே நமக்குன்னு ஒரிஜினாலிடி வேணுங்கறதுக்காக என்னோட கற்பனை வளத்தால் டூயட், டான்ஸ், இப்படி அந்தந்த பாடல்களுக்குகேற்ற மாதிரி ஏதாவது சிரிக்கிறது, சத்தம் கொடுக்கிறது இதெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். அது ரொம்ப பாப்புலர் ஆகி, இப்போ "என்ன சார், இந்த பாட்டுல நீங்க சிரிக்கவே இல்லை' அப்படின்னு தயாரிப்பாளர் கேட்டு வாங்குற அளவுக்குப்போயிடுச்சு.''

""பாடகர்,இசைமைப்பாளர், "மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலம் நடிகர் - இப்படி மூன்றையும் சிறப்பா செஞ்சு காட்டிட்டீங்க.. அடுத்து ஏதாவது சாதிக்கறதுக்குனு ஐடியா வெச்சிருக்கீங்களா?''

""நிறைய இருக்கு. அதெல்லாம் ரிடையர்மென்டுக்குப் பிறகுதான். இன்னும் அதிகபட்சம் ஐந்தாறு வருஷத்தில் பாடறதை நிறுத்திவிடுவேன். அதன்பிறகு சினிமாத்துறையின் ஒவ்வொரு பகுதியையும் ரொம்ப ஆழமாக தெரிஞ்சுக்கப்போறேன். டைரக்டர், எடிட்டர், காமிராமேன்... இப்படித் திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட வெவ்வேறு பேரிடம் கொஞ்ச நாள் கூட இருந்து வொர்க் பண்ணி, நிறைய கற்றுக்கொண்ட பிறகு, கடைசியா சொந்தமா ஒரு படத்தை டைரக்ட் பண்ணப்போறேன். அதுதான் என் லட்சியம்'' என்றார் எஸ்.பி.பி.,

-ரமேஷ் பிரபா


0 comments:

Post a Comment

Pages