கண்ணதாசன் 25-ஆனந்த விகடன்

Author: Nagaraji.B /

கண்ணதாசன் 25பிப்ரவரி 06,2010,02:54 IST

காட்டுக்கு ராஜா. சிங்கம், கவிதைக்கு ராஜா, கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிசரத்தின் சில துளிகள்.





* கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல். அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதை படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்த பெயரை வைத்துக்கொண்டேன் என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.





* சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர்கள் பெயர் நாராயணன்.





* கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று கன்னியின் காதலியில் எழுதிய முதல்பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த கண்ணே கலை மானே கவிஞரின் கடைசிப்பாட்டு.





* எப்போதும் மஞ்சள் பட்டுச்சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும், திடீரென்று காணாமல் போய்விடும். பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கு என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை சொல்வார்.





* மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்கு பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.





* வேட்டியின் ஓரத்தை பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளை சொல்வார். நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்.





* கொஞ்சம் மது அருந்தி விட்டால் என் சிந்தனைகள் சுறு சுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு அசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.





* கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா, தனக்கு பிடித்த பாடல்களாக என்னா பொல்லாத வாழ்க்கை, சம்சாரம் என்பது வீணை ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.





* காமரசர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை.





* கண்ணதாசனுக்கு பிடித்த இலக்கியம் கம்பராமயணம். நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதில் இருந்து தான் என்பார்.





* ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால் சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் பராசக்தி, ரத்தத் திலகம், கறுப்புபணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.





* முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள். 50 வயதில் வள்ளியம்மையை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்.





* படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்கு போய் அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கி விட்டு தான் செல்வார்.





* கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியை கிளப்பி, வீடு தேடி பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றி சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.





* உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தகங்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்.





* தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். வணவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் என்றார்.





* திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றலா, தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.


* திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன்பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. இது எனக்கு சரிவராது என்றார்.


* குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொண்டுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும், வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தில் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.


* இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்....



ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு.


0 comments:

Post a Comment

Pages