சச்சின் 25

Author: Nagaraji.B /

சச்சின் 25மார்ச்

உலகின் முதல் டபுள் டன் ஹீரோ சச்சின் ! அவருக்கு ""பாரத ரத்னா'' வழங்கியாக வேண்டும் என்கிறார் கபில்தேவ். ஆம்... சச்சின், கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள். இவர் படைக்காத சாதனைகளே இல்லை, தனது சாதனைகளையே உடைத்து, புதிய புதிய சாதனைகளைப் படைக்கிற ஆட்டக்காரர். சச்சின் ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும், அடிக்கிற ஒவ்வொரு ரன்னுக்கும் உலக கிரிக்கெட் வரலாற்றை அப்டேட் செய்ய வேண்டி இருக்கிறது !
* சச்சினின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதுதான் முழுப்பெயர். சச்சினின் அப்பா, பிரபல மராத்தி எழுத்தாளர். அவர் சச்சின் தேவ் பர்மன் என்னும் இசையமைப்பாளரின் தீவிர ரசிகர் என்பதால்தான் மகனுக்கு சச்சின் என்று பெயர் வைத்தார். !
* 1988ம் ஆண்டு மும்பை வித்யா மந்திர் பள்ளியில் படித்தபோது வினோத் காம்ப்ளியுடன் இணைந்து குவித்த 664 ரன்கள்தான் சச்சினை கிரிக்கெட் உலகுக்குக் கொண்டுவர உதவியது. மும்பை அணிக்காக ஆடிய ரஞ்சிக் கோப்பையிலும் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, சட்டென எல்லார் மனதிலும் பதிந்தார் சச்சின் !
* சச்சினை கிரிக்கெட் விளையாட ஆர்வப்படுத்தியவர் அவரது அண்ணன் அஜீத். மும்பை பாந்த்ராவில் இருந்த சச்சினின் வீட்டில் இருந்து, கிரிக்கெட் கோச்சிங் போய் வர முடியாது என்பதால், சிவாஜி நகரில் உள்ள மாமா வீட்டில் சச்சினை தங்க வைத்து, கூடவே இருந்தார் அண்ணன் அஜீத்.
* முதலில் சென்னை எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷனில் பௌலர் ஆவதற்குப் பயிற்சிப் பெற வந்தார் சச்சின். ஆனால், பயிற்சியாளரான டென்னிஸ் லில்லி, "" நீ சூப்பர் பேட்ஸ்மேன் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போய் பேட்டிங் பயிற்சி எடு'' என்று அனுப்பி வைத்தார்.
* ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக கிரிக்கெட் மைதானத்துக்கு வந்து கடைசி ஆளாகப் போவாராம் சச்சின். ""அச்ரேகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நாம் எப்படி விளையாடுகிறோமோ,அதில் இன்னும் சிறப்பாக விளையாடச் சொல்லித் தருவார். நம் ஸ்டைலை மாற்ற மாட்டார்''என்பார் சச்சின்.
* எந்தப் பந்து வீச்சாளர்கள் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறார்களோ, அவர்களின் பந்துகளை எதிர்கொள்வதற்கு ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுப்பார். 98-ம் ஆண்டு ஷேன் வார்னேவின் சுழற்பந்தை எதிர்கொள்ளச் சிரமப்பட்டவர், சுமார் ஒரு மாதம் சென்னையில் தங்கி சிவராமகிருஷ்ணனிடம் பயிற்சி எடுத்தார். அதன்பிறகு சச்சின் ஆடிய ருத்ரதாண்டவத்தை ஷேன் வார்னே இன்னும் மறக்கவில்லை!
* முதன்முதலாக வேர்ல்டு பெல் நிறுவனத்துடன் 18 கோடி ரூபாய் என்கிற கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டார். இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கு யாரும் ஒப்பந்தமானது இல்லை என்று வியந்தது விளையாட்டு உலகம். இப்போத சச்சினின் சொத்துக்கள் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது. அண்ணன் அஜீத்தான் முழுவதையும் கவனித்துக் கொள்கிறார்.
* கிரிக்கெட் விளையாட வந்த ஆரம்பத்தில் நண்ப்களை அதிகம் மிஸ் செய்வேன். இப்போது என் ஆரூயிர் நண்பன் என் கிரிக்கெட் பேட்தான். அவன் என்னைவிட்டுப் பிரிவதை என்னால் எப்போதும் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று சொல்லி இருக்கிறார் சச்சின்!
* கிரிக்கெட் இல்லையென்றால் மனைவி அஞ்சலி மகன் அர்ஜுன் மகள் சாராவுடன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் கிளம்பிவிடுவார். மகனை கிரிக்கெட் பிளேயராகவும், மகளை டென்னிஸ் பிளேயராகவும் உருவாக்க வேண்டும் என்பது கனவு!
* மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பது சச்சினின் ஆசை. ஆனால் இந்தியாவில் அது முடியாத காரியம் என்பதால் சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் சொந்தமாக வீடு வாங்கினார். வீட்டின் அருகே உள்ள பார்க்கில் குடும்பத்தோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பதுதான் சச்சினுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!
* எந்த நகரத்தில் கிரிக்கெட் விளையாடப்போனாலும், மேட்ச் இல்லாத நாட்களில் பேஸ்பால் கேட் கூலிங்கிளாஸ், தாடி என கெட்-அப்பை மாற்றி, நகர்வலம் செல்லப் பிடிக்கும். மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு வெளியே செல்வதை நிறுத்திவிட்டார்.
* சென்டிமென்ட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். கிரிக்கெட் என்றால் 10-ம் நம்பர் ஜெர்சி கார் என்றால் 9999 என ராசியான நம்பர்களை யாருக்கும் விட்டுத்தரமாட்டார்!
* லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகர். லதா மங்கேஷ்கர், ச்சினை எப்போது பார்த்தாலும் அவருக்காக நாலு வரிகளாவது பாடாமல் போகமாட்டார்.
* பெர்ஃப்யூம், சன் கிளாஸ் மியூஸிக் சிஸ்டம், பிராண்டட் ஷர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் கார் இவைதான் சச்சின் அதிகம் விரும்பி வாங்குபவை.
* பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி தேடித் தந்தார் கேப்டன் சச்சின். இருப்பினும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால் தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
* இதுவரை மொத்தம் ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கிறார் சச்சின். இதில் இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து மேன் ஆஃப் த சீரிஸ் விருது பெற்றிருக்கிறார்.
* 2001 - 2002ம் ஆண்டின்போது டென்னிஸ் எல்போ பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டார். ஆபரேஷன் காரணமாக விளையாட முடியாமல் இருந்தவருக்கு உறுதுணையாக இருந்தது மனைவி அஞ்சலி. என் மனைவி மட்டும் எனக்குத் துணையாக இல்லை என்றால் மீண்டும் கிரிக்கெட் பேட்டைத் தொட்டிருக்கவே முடியாது என நெகிழ்வார் சச்சின்!
* இதுவரை மேட்ச் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு நான் சரியாகத் தூங்கியதே இல்லை. இரவு முழுக்க அடுத்த நாள் மேட்சைப் பற்றியேதான் என் மனதில் படம் ஓடிக் கொண்டு இருக்கும் என்பார்!
* சிறுவனாக இருந்தபோது நான்கு மணி நேரம் விளையாடினாலும் சச்சினை அவுட் ஆக்க முடியாமல் தவிப்பார்களாம். பயிற்சியாளர் அச்ரேகர் ஒரு ரூபாய் நாணயத்தை ஸ்டம்ப்பின் மேல் வைத்துவிட்டு சச்சினை அவுட் ஆக்குபவருக்கு ஒரு ரூபாய் சொந்தம் எனச் சவால்விடுவாராம்!
* 2005ம் ஆண்டின்போது பத்திரிகை ஒன்று எண்டுல்கர் எனத் தலைப்பிட்டு சச்சினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியது. என்னைப்பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அந்த விமர்சனத்தை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதநாள் அது மட்டும்தான்! என்றார் சச்சின்!
* சச்சினுக்கு மிகவும் பிடித்தது கார் ரேஸ். ஃபார்முலா-1 ரேஸ் நடக்கும் மைதானங்களுக்கு நேரடியாக விசிட் அடிப்பார் சச்சின். நரேன் கார்த்திகேயனுடன் பேசி, வேகமான கார்களைப்பற்றி அப்டேட் செய்து கொள்வார்.
* கிரிக்கெட் விளையாட வந்த புதிதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேரி சோபர்ஸ் எழுதிய ட்வெண்ட்டி இயர்ஸ் அட் த பாப் என்கிற புத்தகம்தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னார் சச்சின். இப்போது 20 வருடங்களைக் கடந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார் மாஸ்டர் ப்ளாஸ்டர்!
- சார்லஸ்


0 comments:

Post a Comment

Pages