உடைகள் பேசும் உண்மை!

Author: Nagaraji.B /

உடைகள் பேசும் உண்மை!பிப்ரவரி 15,2010,12:13 IST

உடைகள் நமது ரசனையின் முதல் அடையாளங்கள். என்ன நிறம் நமக்குப் பிடிக்கிறது,ஏன் அதுபோன்ற ஆடையைத் தேர்வு செய்கிறோம் என்பது பிறரோடு பகிர்ந்து கொள்ளப்படாத ரகசியம். புத்தாடைகள் எப்போதுமே நம்மை உற்சாகம் கொள்ளவைக்கின்றன. மற்றவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்று உள்ளூர மனது சந்தோஷம் கொள்கிறது. சரியாக உடை அணியாத நாளில் மனம் சோர்ந்து விடுகிறது ; அல்லது, கோபம் கொள்கிறது.
சிறு வயதில் விதவிதமான ஆடைகளுக்குக் கிடைக்காமல்போன ஆதங்கம் யாவர் மனதிலும் ஓரமாக இருக்கவே செய்கிறது. புத்தாடை கிடைக்கும் என்பதற்காகவே வருடத்தில் இரண்டு,மூன்று முறை பிறந்தநாள் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். பால்ய வயதின் நிராசைகளை, வளர்ந்து பெரியவர்களாகி சம்பாதிக்கத் துவங்கியதும் தீர்த்துக்கொள்ளத் துவங்குகிறோம்.
தன்னுடைய முதல் சம்பளத்தில் புத்தாடை வாங்குவதில் ஒரு பெருமை இருக்கிறது. அப்படி வாங்கி அணியும் உடை மற்ற உடைகளைவிட மிக அழகாகவும், பெருமையாகவும் இருப்பதுபோலத் தோன்றக்கூடும். அவை வெறும் மன மயக்கங்கள்தான்; என்றாலும், அந்த மயக்கம் தேவையாக இருக்கிறது.
உடைகள் ஏற்படுத்தும் கனவுகள் வாழ்வில் மறக்க முடியாதவை. ஒவ்வொரு வயதிலும் ஒருவித உடை ஆதங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. எனது பள்ளி வயதில் என்னோடு படித்த ஒரு சிறுவன் சிவப்பு நிறத்தில் இளமஞ்சள் வட்டமிட்ட ஒரு புதுச்சட்டை அணிந்து வந்திருந்தான். அதுபோன்ற ஒரு சட்டை தனக்குக் கிடைக்காத என்று வகுப்பில் இருந்த ஒவ்வொரு பையனும் ஆசைப்பட்டார்கள்.
அந்தச் சட்டைத்துணி எங்கே கிடைக்கிறது, எந்த டெய்லரிடம் அதைத் தைத்தான் என்று மாறி மாறி விசாரித்தார்கள். பையனோ பெருமிதத்துடன், தனது அப்பா மிலிட்டரியில் இருந்து திரும்பி வரும்போது, நாக்பூரில் வாங்கி வந்தது என்றான். ஏன் நமது அப்பாக்கள் மிலிட்டரியில் வேலை செய்யவில்லை என்று என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் பெருமூச்சு விட்டான்.
இவனுக்காகவே அதுபோன்ற ஒரு சட்டையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று துடித்தேன்.
அடுத்த பிறந்த நாளுக்குச் சட்டை வாங்கச் சென்றபோது அதே நிறம், அது போன்ற வட்டம் உள்ள சட்டை கிடைத்து விடாதா என்று கடைகடையாகத் தேடினேன். ஆனால், அதுபோன்ற சட்டை கிடைக்கவே இல்லை.
வேறு நிறத்தில் புதுச் சட்டை வாங்கியபோதும் மனதின் ஆதங்கம் தீரவில்லை. அந்தச் சிறுவன் பள்ளி மாறி வேறு ஊருக்குச் சென்று விட்டான். அவன் பெயர் கூட இன்று மறந்துவிட்டது. ஆனால், அந்தச் சிவப்பு நிற வட்டம் போட்ட சட்டை மனதில் அப்படியே இருக்கிறது. இப்படி உடைகள் நமக்குள் மறக்க முடியாத சில ஏக்கத்தை உருவாக்கிவிடுகின்றன. அவை ஒருபோதும் தீராதவை.
கல்லூரி வயதில் நட்பே பிரதானம். அப்போது ஒன்று போல ஒரே நிறத்தில் உடை அணிந்து கொள்வது நட்பின் அடையாளம். ஒருவர் சட்டையை மற்றவர் போட்டுக் கொள்வார்கள். நண்பர்களை இப்படிப் போட்டுக் கொள்ள அனுமதிக்கும் மனது, வீட்டில் உள்ள அண்ணனோ, தம்பியோ அதே சட்டையைக் கேட்காமல் எடுத்துப் போட்டு விட்டால் கோபம் கொள்ளும் ; சண்டை போடத் தூண்டும். உடைகள் குறித்த விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
உடைகள் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. அதன் பயன்பாடு வியப்பானது. அம்மாவின் சேலை குழந்தைக்குத் தொட்டில் ஆவதும், தங்கையின் தாவணியாவதும், தலையணை உறையாவதும், பின்பு அங்கிருந்தும் இடம் பெயர்ந்து சமையலறையின் கைப்பிடித் துணியாவதுமாக ஒரு பெரிய காலமாற்றத்துக்கு
உள்ளாகிறது. ஆண்களின் வேட்டியோ, இட்லித் துணியாகவோ, தரை துடைக்கும் கிழிந்த துணியாகவோ மாறுவதோடு தன் பணியை முடித்துக் கொள்கிறது. பேண்ட், சட்டைகள் அதற்கும் பயன்படுவது இல்லை. அவை பயன்பாடு கடந்தவுடன் யாருக்காவது கொடுக்கப்படுகின்றன. நமது ஆடைகளில் நமது ஆசைகள் ஒட்டி இருக்காதா ?
தனக்கு விருப்பமான சேலை கறை பட்டதற்கு, கிழிந்ததற்கு அழும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். நிஜமான வலி அது. நினைத்து நினைத்துப் பல வருடங்கள் அழுபவர்கள் இருக்கிறார்கள். உடை விஷயத்தில் ஆண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவது இல்லை. அரிதாகவே சிலர் அப்படி இருக்கிறார்கள்.



ஆண்களில் பலர் நாற்பது வயதைக் கடந்தவுடன் உடைகள் மீதான ரசனை உணர்வை இழக்கத் துவங்குகிறார்கள். பெண்களுக்கோ வயது அதிகமாகும்போதுதான் உடைகளின் மீதான் ரசனையும், அக்கறையும் அதிகமாகிறது. பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்கிறார்கள். புதுவித ஆடையை அணிந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். மயில் கழுத்து நிறம், கத்திரிப் பூ நிறம், துத்தநாக கலர் என்று துல்லியமாக நிறத்தைச் சொல்லி கடைகளில் தேடுகிறார்கள். உடைகளைப் பகிர்ந்து கொள்வதிலும், தேர்வு செய்வதிலும் ஆண்களை விடபெண்களே அதிக ஆர்வமுடையவர்கள். உடைகள் குறித்துப் புரிந்து கொள்ள முடியாத அதீதப் பற்றும், காரணமற்ற கோபமும் பெண்களின் இயல்பாக இருக்கிறது.
ஹிந்தி இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான பிரேம்சந்த், ""பட்டுச் சட்டை''என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஒருவன் பணக்கார வீட்டைச் சேர்ந்தவன். மற்றவன் ஏழை. சலவைத் தொழிலாளியின் வீட்டுப்பிள்ளை.
பணக்காரச் சிறுவனுக்குத் தினம் ஒரு புது உடை கிடைக்கிறது. ஏழைச் சிறுவன் எப்போதுமே கிழிந்த டவுசர்-சட்டைகளை அணிந்து வருகிறான். அதற்காக தபால் பெட்டி என்று கேலி செய்யப்படுகிறான். என்றாவது ஒருநாள் தானும் பணக்காரச் சிறுவனைப் போல உடை அணிய வேண்டும் என்று கனவு காண்கிறான்.
ஒரு நாள், பணக்காரச் சிறுவனின் சில்க் சட்டை சலவைக்காக தனது வீட்டில் கிடப்பதைப் பார்க்கிறான். அதை ஒரு முறை அணிந்து பார்க்க விரும்பி, யாரும் அறியாமல் எடுத்துப் போட்டுக் கொள்கிறான். அந்த உடை அவனை மிகவும் சந்தோஷம் கொள்ள வைக்கிறது. உற்சாகத்தோடு அவன் ஆற்றின் பக்கம் ஓடுகிறான். அங்கே பணக்காரப் பையனின் வீட்டு வேலையாள் அதை கண்டுபிடித்து விடுகிறான்.
பொது இடத்தில் நிறுத்தி வைத்து, அந்தச் சிறுவனின் சட்டை-டிராயரை உருவி எடுக்கிறார்கள். ""உனக்குப் பட்டுச் சட்டை கேட்குதா ?'' என்று அந்தப் பையனை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தி விடுகிறார்கள். அதைப் பார்த்து அந்தப் பணக்காரப் பையன் கைகொட்டிச் சிரிக்கிறான். பின்,அந்த உடையை தீயிட்டு எரித்து விடுகிறார்கள். அந்தப் பையனின் அப்பா அவனைப் பள்ளியில் இருந்து நிறுத்தி விடுகிறார்.
இதனால் அந்தப் பையன் சலவைத் தொழிலாளியாகவே வளர்கிறான்.
பின்,அந்தச் சிறுவன் கொல்கத்தாவுக்குச் சென்று, வளர்ந்து அங்கேயே வாழத் துவங்குகிறான். ஒருநாள் சாலையோரம் ஒரு பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான். அவனது இறுதிச் செலவிற்காக, இன்னொரு பிச்சைக்காரன் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறான். சற்று நேரம் அவனது கண்களைப்பார்த்து விட்டு,அது தன்னுடைய பழைய பணக்கார நண்பன் என்று அறிந்து, திகைப்படைகிறான். வாழ்ந்து கெட்டவன் என்று எண்ணிக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்று தன் மனைவியின் நகையை அடகு வைத்து, ஒரு பட்டு வேட்டி வாங்குகிறான். அதைக் கொண்டு வந்து அந்தப் பிச்சைக்காரன் மேல் போர்த்துகிறான். அதைக் கண்ட மற்றொரு பிச்சைக்காரன் எதற்காக இப்படி ? என்கிறான். ""அது ஒரு பழைய கடன். மிகவும் நாள்பட்ட கடன். அதை இப்போதுதான் திருப்பிச் செலுத்த முடிந்தது.'' என்கிறான். உடைக்காக சிறு வயதில் பட்ட அவமானங்கள் எளிதில் மறையக் கூடியது இல்லை. அதே நேரம், பால்ய வயதின் நட்பு எவ்வளவு வயதானபோதும் அதன்கசப்புக்களை மீறி மீண்டும் துளிர் விடவே செய்கிறது. உடைகளின் பயணம் மிக வியப்பானது.
1996ம் ஆண்டு வெளியான டச்சு திரைப்படம் த ட்ரெஸ். அலெக்ஸ் வான் வார்மர்டெம் இயக்கிய இப்படம், நீல நிற உடை ஒன்று எப்படி ஒவ்வொரு பெண்ணிடம் மாறி மாறிப் பயணம் செய்கிறது என்பதை மிக இயல்புடன் வேடிக்கையாகச் சொல்கிறது. ஆடைத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பெண்கள் அணியும்படியான தனித்துவமான கவுன் ஒன்றை தயாரித்து, விற்பனை செய்கிறது. அந்தப் புதிய ரக உடைபோல் பல ஆயிரம் உடைகள் தயாரிக்கப்பட இருக்கின்றன. முதலில் 61வயதான பெண் ஒருவர் இந்த உடையை வாங்கி அணிகிறார். அது அவளுக்கு பொருத்தமானதாக இல்லை என்று அவள் கணவன் எரிச்சல் படுகிறான்.
பின் அது அவளது வேலைக்காரப் பெண்ணுக்குச் செல்கிறது. அது அவளுக்கு தனது உடல் வாளிப்பை காம உணர்வைத் தூண்டுவதாக நினைக்கிறாள். ஒருநாள் அவள் இந்த நீல உடை அணிந்து ரயிலில் பயணம் செய்யும்போது, அந்த உடையில் மயங்கி ஒருவன் அவளைப் பின் தொடர்கிறான். அவர்களுக்குள் ரகசிய உறவு ஏற்படுகிறது. இப்போது அதை 16 வயதுப் பெண் ஒருத்தி வாங்குகிறாள். அது அவளிடம் இருந்து திருடுபோகிறது. அதை வேறு பெண் அணியத் துவங்குகிறாள். இப்படியாக ஒரு உடை மேற்கொள்ளும் பயணத்தோடு ஒரே ஆடை வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு குழப்பங்களையும் எப்படி உருவாக்குகிறது என்பதை விவரிக்கிறது.
உடைகள் நமது மனதையே பிரதிபலிக்கின்றன. நாம் மாறத் துவங்கியதும் நமது உடைகளும் மாறத் தொடங்குகின்றன. அழகான உடை என்று தனியாக எதுவும் இல்லை. அது அணிந்து கொள்பவரின் சந்தோஷம் மற்றும் மனவிருப்பத்தால் அழகு கொள்கிறது என்பதையே படம் சுட்டிக்காட்டுகிறது. அதுதான் உடைகள் சொல்லும் உண்மையும்கூட!!!


1 comments:

kaviya said...

happaa pothum mudiyala

Post a Comment

Pages