படித்ததில் பிடித்தது: பிரிவு
Author: Nagaraji.B /படித்ததில் பிடித்தது: பிரிவு
அபா நகரம் நிலநடுக்கத்தால் அழிந்துபோன நாளில் ஒரு தாய் தன் மகன் மரணமடைவதைப் பார்த்தாள். அவளால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவனைத் திருப்பித் தருமாறு தெய்வங்களிடம் வேண்டினாள். கருணை கொண்ட தெய்வங்களும் அந்தக் குழந்தையின் ஆன்மாவை மறு உலகத்தில் நுழைய அனுமதிக்காமல் மறுபடியும் அதை அவனுடைய உடலிலேயே புகுத்திவிட்டன. ஆனால் தெய்வங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! அந்த உடல் இன்னமும் செத்துத்தான் கிடக்கிறது.அதன் காயங்கள் ஆறவில்லை. மகன் திரும்பக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் திளைத்த தாய், அது கஷ்டப்படுவதையும் துன்புறுத்தும் தனது சதைப்பிண்டத்தின் கைதியாகியிருப்பதையும் கண்டு பீதி அடைந்தாள். அதன் பிறகுதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது.குழந்தை அழ ஆரம்பித்தது. புழுக்கள் அதன் மீது அப்பிக்கொண்டு அதன் உடலுள் புகுந்தன. அது சாவை வேண்டி அழுதது. ஆனால், நான்தான் சொல்கிறேனே, அது ஏற்கெனவே இறந்துபோயிருந்தது. நொந்துபோன அந்தத் தாய் அதைக் கத்தியால் குத்தினாள்.ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை, பல முறை. பிறகு பெரிய பாறைகளால் தாக்கினாள். விஷத்தைக் கொடுத்தாள். கழுத்தை நெரித்தாள். ஆனால் அந்தக் குழந்தை வலியில் அழுதுகொண்டே இருந்தது. கடைசியில் அந்தத் தாய் தோல் கிழிந்த, எலும்புகள் உடைந்த, இரத்தம் உறைந்த அந்த உடலைத் தூக்கிக்கொண்டுபோய் நெருப்பில் எறிந்தாள்.பாவப்பட்ட அந்தக் குழந்தையும் எரிந்து புகையாகவும் சாம்பலாகவும் மாறியது. காற்று அதைச் சிதறடித்து வெளியெங்கும் கலக்கச் செய்தது. அந்தத் தாய் முடிந்த அளவு அவளைத் தேற்றிக்கொண்டாள். ஆனால், அவள் அதைச் செய்திருக்கக் கூடாது.ஏனென்றால் அந்தக் குழந்தையின் ஆன்மா கண்ணுக்குப் புலப்படாத அந்த எச்சங்களின் வழியாக அலைந்துகொண்டுதான் இருக்கிறது. துயருற்ற அந்த ஆன்மா உலகில் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது. சுவாசிக்கும்போதும், வாயைத் திறக்கும்போதும், நீங்கள் அதை உணர்கையில் திடீரென்று ஒரு சோகம் உங்கள் மீது கவியும்.சிறுகதையாசிரியர்: ஆல்பெர்தோ சிம்மல் (மெக்சிகோ) நூல்: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்) தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ராஜகோபால்வெளியீடு: நிழல், 31/48 ராணி அண்ணாநகர், கே.கே.நகர், சென்னை -78.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment