டிப்பிங் பாயின்ட் என்றால் என்ன? ஏதாவது ஒரு சமூகப் பழக்கம் அல்லது ஒரு புதிய பொருள் அல்லது ஒரு புத்தகம் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்து, காட்டுத் தீ போல் பரவுவதை பார்த்திருக்கிறோம். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தால், ஒரு சிறிய விஷயம்தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். அந்தச் சிறிய விஷயம்தான் டிப்பிங் பாயின்ட்.
இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். நம்மைச் சுற்றியுள்ள பல பொருட்கள் லேசில் அசைக்க முடியாதவையாக உள்ளன. ஆனால், சரியான இடத்தில் ஒரு சிறிய தள்ளு தள்ளினால், அது அசைந்து கொடுக்கத்தான் செய்கிறது. அந்தச் சரியான இடம்தான் டிப்பிங் பாயின்ட். இதை எப்படி நம் வசப்படுத்துவது என்கிற நெம்புகோல் சூத்திரம், சக்ஸஸ் ஃபார்முலா. அதைத்தான் இந்தப் புத்தகம் அருமையாகச் சொல்லி இருக்கிறது. 1958-இல் வுல்வரின் வேர்ல்ட் வைட் (Wolverine World Wide) என்ற நிறுவனம் ஹஷ் பப்பீஸ் ஷூக்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. பன்றித் தோலால் செய்யப்பட்ட இந்த ஷூக்களின் அடிப்பாகம் (Sole) ரப்பரால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காரணங்களால், ஹஷ் பப்பீஸ் மக்கள் மனங்களில் நச் என்று இடம் பிடித்தது; விற்பனை பல லட்சம் ஜோடிகளாகிச் சிகரம் தொட்டது.
1994-ல் விற்பனை சரியத் தொடங்கியது. அந்த வருட விற்பனை 30,000 ஜோடிகளே. தயாரிப்பை நிறுத்த முடிவு செய்தது கம்பெனி. அப்போது ஓர் ஆச்சரியம்.... கம்பெனி எந்த முயற்சியும் எடுக்காமலே, விற்பனை எகிறத் தொடங்கியது. 1995-ல் விற்பனை 4 லட்சம் ஜோடிகள்; 1997-ல் 17 லட்சம் ஜோடிகள். எப்படி நடந்தது இந்த ஜீபூம்பா வேலை?
செசமி ஸ்ட்ரீட் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி. அமெரிக்கக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை சுவாரசியமாக ஊட்டுவதற்காக 1969-ல் தொடங்கியது இந்த நிகழ்ச்சி. இன்று 120 நாடுகளில் 350 சேனல்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு 80 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வருடங்களாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகி, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக வருடங்கள் ஓடும் தொடர் என்ற பெருமையையும் நூற்றுக்கணக்கான விருதுகளையும் இந்த நிகழ்ச்சி பெற்றது எப்படி?
நமக்குள்ளும் இப்படி விடைகள் கிடைக்காத புதிர்கள் பல உண்டு. நாம் இந்தக் கேள்விகளை அடிமனத்தில் ஆராரோ பாடி தூங்க வைத்துவிடுகிறோம். ஆனால், இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் மால்கம் க்ளேட்வெல், கொஞ்சம் வித்தியாசமாக, தன் மனத்தில் எழுந்த பெரிய கேள்விகளை ஆழமாக ஆராய்கிறார்; அதற்கான விடைகளைச் சொல்கிறார். அவர் கண்டுபிடித்த விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். புத்தகம் வெளியான ஆறே வருடங்களில் அமெரிக்காவில் மட்டும் 20 லட்சம் பிரதிகள் விற்பனையானது என்கிற தகவலே போதும், இதன் வரவேற்பை எடுத்துச் சொல்ல.
க்ளேட்வெலின் இந்த அமோக வெற்றிக்குக் காரணம், அவருடைய தர்க்க ரீதியான, வித்தியாசமான சிந்தனை. நாம் விடைகள் தேடும் பல கேள்விகளுக்கு க்ளேட்வெல் தரும் பதில்களும் அவர் எடுத்துவைக்கும் வாதங்களும் நாம் ஆண்டாண்டு காலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஏராளமான கோட்பாடுகளைத் தகர்க்கின்றன.
சில உதாரணங்கள்:
குழந்தைகளின் அறிவு மற்றும் குணங்கள் டி.என்.ஏ. காரணங்களால் மரபணுக்கள் மூலம் நிச்சயிக்கப்படுகின்றன. இது அறிவியல் உண்மை. டி.என்.ஏ. தவிர, பெற்றோர் நம்மை வளர்க்கும் முறையும் குண நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நம் நீண்ட கால நம்பிக்கை. 'இல்லை' என்கிறார் புத்தக ஆசிரியர் க்ளேட்வெல். பெற்றோர் வளர்ப்பினால் பாதிப்பு ஏற்படாது; சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் சம வயதினரின் தாக்கமே பாதிப்பை உண்டாக்கும் என்று வாதிடுகிறார், நாமே ஒப்புக் கொள்ளும் விதத்தில் அழகாக, ஆணித்தரமாக.
|
0 comments:
Post a Comment