புத்தக விமர்சனம் |
ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று அவர்கள் நம்மை அனைத்துத் துறைகளிலும் பின்பற்றும் நிலைக்கு வளர்ந்திருக்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கிறோம்... இதன் பின்னணியில் அமெரிக்காவின் வார்ட்டன் ஸ்கூலைச் சேர்ந்த நூலாசிரியர்கள் இந்தியாவில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களிடம் பேட்டிக் கண்டு, அவர்களின் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவுகளை புத்தக வடிவில் தந்திருக்கிறார்கள். இந்தியாவில் 3,000 டாலருக்கு காரும், 300 டாலருக்கு கம்ப்யூட்டரும், 30 டாலருக்கு மொபைல் போனும் கிடைப்பது சாத்தியமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் புதுமைகளைக் கண்டறியும் ஆராய்ச்சிக் கூடமாக இந்தியா மாறிவருவதுதான். இந்தியாவின் மென்பொருள் தொழில் வளர்ச்சி பற்றி நூலாசிரியர்கள் குறிப்பிடும் போது, ''ஆரம்பத்தில் விலை மலிவு என்பதால் வாடிக்கையாளர்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதற்குப்பிறகு அத்தொழிலில் இருக்கும் தகுதி, திறமை கருதி அப்படியே இங்கேயே நிலைத்து விடுகிறார்கள்'' என்கிறார்கள். இதனால்தானோ என்னவோ, நமது மென்பொருள் மற்றும் பி.பீ.ஓ. நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'இந்தியாவுக்கு வேலைகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படும்' என்கிற அறிவிப்பை கேட்டும் அதிகமாக சலித்துக் கொள்ள வில்லை! 1991-க்கு முன்னும், பின்னும் அரசு அதிகாரிகளின் செயல்பாடு குறித்து புராக்டர் அண்ட் கேம்பிளின் தலைமைப் பொறுப்பிலிருந்த குருசரண்தாஸ் குறிப்பிடும் போது, ''எனது முப்பது ஆண்டுகால பிஸினஸ் வாழ்க்கையில் நான் சம்பந்தப்பட்டத் தொழிலை அறிந்து கொண்ட ஒரு அதிகாரியைக் கூட நான் சந்தித்ததில்லை. இருப்பினும் எனது தொழிலை நசுக்கும் சக்தி அவர்களிடம் இருந்தது'' என்கிறார். எவ்வளவு அப்பட்டமான உண்மை. ஆனால் இன்று நிலைமை மாறிவருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களான டாடாவும், பிர்லாவும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டன. 1898-ம் ஆண்டில், நாட்டு நலனில் அக்கறை கொண்ட டாடா குழுமத்தின் அப்போதைய தலைவ ரான ஜாம்ஷெட்ஜி டாடா தனது சொத்தில் பாதியை கிட்டத்தட்ட 2 லட்சம் பவுண்ட்டை பெங்களூரில் 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' ஆரம்பிக்கக் கொடுத்தார். இது அமெரிக்காவில் 'கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகம்' ஆரம்பிக்க ஆண்ட்ரூ கார்னிஜ் கொடுத்த 1 மில்லியன் டாலரை விட அதிகமானதாகும் (அந்த காலகட்ட மதிப்பீட்டின்படி)!. ஆக, இந்திய நிறுவனங்களிடம் தனிநலனிலும் பொதுநலம் மிகுந்திருக்கிறது. தவிர, 'ஜுகாத்' என சொல்லப்படுகிற இருக்கிற வசதி வாய்ப்புகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்தும் தன்மையும் இந்தியர்களாகிய நமக்குக் கை வந்த கலை. | |
|
0 comments:
Post a Comment