<<<----B.NAGARAJI----->>>
புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களில் ஒருவன் பெயர் "முட்டாள்". அதனால் அவனை மற்ற மாணவர்கள் "முட்டாளே இங்கே வா! முட்டாளே இதைச் செய்!" என்று கேலி செய்தனர்.
தன் பெயரே தன்னைக் கேலிக்கு உள்ளாக்குகிறதே" என்று வருந்தினான்.
ஆசிரியரை வணங்கிய அவன், "ஐயா, எனக்கு ஒரு நல்ல பெயராக நீங்கள் வைக்க வேண்டும். எல்லோரும் மதிக்கும் பெயராக அது இருக்க வேண்டும்." என்று வேண்டினான்.
"நீ இங்கிருந்து புறப்பட்டு பல ஊர்களுக்கும் சென்று வா. எந்தப் பெயர் உனக்குப் பிடிக்கிறது என்று தேர்ந்தெடுத்து வந்து சொல். அந்தப் பெயரையே உனக்கு வைத்து விடுகிறேன்" என்றார் அவர்.
அங்கிருந்து புறப்பட்ட அவனும் ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தான்.
வழியில் சிலர் சுடுகாட்டிற்குப் பிணம் ஒன்றைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். இறந்தவனைப் பற்றி விசாரித்தான் முட்டாள். இறந்தவன் பெயர் தேவன் என்று தெரிந்து கொண்டான்.
"தேவன் எப்படிச் சாவான்?"என்று கேட்டான் அவன்.
"தேவன் என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். சாவு என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். பெயரில் என்ன உள்ளது? ஒருவனை அடையாளம் காட்டுவதுதான் பெயர். இது தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?" என்று எரிச்சலுடன் பதில் சொன்னான் ஒருவன்.
இன்னொரு ஊரை அடைந்தான் அவன். ஒரு வீட்டின் முன் நின்று,"அம்மா, தாகமாக உள்ளது குடிக்கத் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான்.
"தண்ணீரெல்லாம் தர முடியாது... இங்கிருந்து போ..." என்று விரட்டினாள் அந்த வீட்டிலிருந்தவள்.
அவளைப் பற்றி விசாரித்தான். அவள் பெயர் காவேரி என்று தெரிந்து கொண்டான்.
அங்கிருந்து சென்ற அவன் நான்கு சாலை சந்திப்பை அடைந்தான். எதிரி வந்த ஒருவரிடம்,"அய்யா, பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு எப்படி செல்வது/" என்று விசாரித்தான்.
அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.
உங்கள் பெயர் என்ன? என்றான்
அவர் "வழிகாட்டி" என்றார்.
இன்னொரு இடத்தில் ஒரு பெண்ணை அவள் தாய் அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
"ஏனம்மா அந்தச் சிறுமியை அடிக்கிறீர்கள்?'
"வேலைக்குச் சென்ற அவள் வேலை எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி உள்ளாள். இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? அதனால்தான் அடிக்கிறேன்."என்றாள் அவள்.
"உங்களின் மகளின் பெயர் என்ன" என்று கேட்டான்.
"திருமகள்" என்றாள் அவள்.
ஊர் திரும்பிய அவன் தன் ஆசிரியரை வணங்கினான்.
"என்ன பெயரித் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஆசிரியர்.
"தேவன் என்ற பெயருடையவனால் சாவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தாகத்திற்கு தண்னீர் தர மறுப்பவளின் பெயர் காவேரி. வழிகாட்ட முடியாதவனின் பெயர் வழிகாட்டி. வறுமையில் வாடுபவளின் பெயர் திருமகள். பெயர் ஒருவரை அடையாளம் காட்டும் குறியீடுதான். மற்ற பெயர்களுக்கு முட்டாள் என்கிற என்னுடைய பெயரே நன்றாக இருக்கிறது" என்றான் அவன்.
எல்லோருக்கும் பெயருக்கு ஏற்றபடியா செயல்பாடுகள் இருக்கிறது?